2021-06-28

அபிநயம்

 

அபிநயம்


பாவம் (ப) + ராகம் (ர) + தாளம் (த) = பரதம்.

பாவம், ராகம், தாளம் என்பவற்றிலிருந்து முதல் மூன்று எழுத்துக்கள் சேர்ந்து பரதம் என்று கூறலாம். இம்மூன்றில் பாவம் சிறப்பிடம் வாய்ந்தது. பல நடன பாடல்களுக்கு முதுகு எலும்பாகத் திகழ்வது முகபாவங்களே. அகத்தில் இருப்பது முகத்தில் தெரியும் என்பது பழமொழி. அதேபோல், மன உணர்வுகளில் ஏற்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுதான் முகபாவனை. மனிதர்களாகிய நம் மனதில் எழும் உணர்ச்சிகள் பல விதம். ஒருவரின் உணர்வுகள் அவரின் பால், வயது, வாழும் சூழ்நிலைக்கேற்ப அலக்கமுடியாத எண்ணிக்கையில் விரிவடைந்திருக்கின்றன. ஒரு மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலைக்கேற்ப மன உணர்வுகளை உருவாக்கிக் கொள்கிறான். உள்ளத்தில் உருவாகும் உணர்ச்சிகளுக்கு, உணர்வே காரணம். இந்த உணர்வை பரதமுனி (பரத ஸ்ரத்தை-நாட்டிய நூலை இயற்றியவர்) “ஸாத்விகாபிநயம்” என்கிறார். ஸாத்விகாபிநயம் என்றால் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உடலுறுப்புகளாலும் முகத்தாலும், வாக்கினாலும் வெளிப்படுத்துவது ஆகும். மனிதனின் மனத் தத்துவத்தைப் பற்றி நாட்டிய சாஸ்திரத்தில் நிறைய சொல்லியிருக்கிறார் பரதமுனி. மனிதனின் மனத் தத்துவத்தை பாகுபாடு செய்யவும், பாத்திரங்களைப் படைப்பதற்கும், நாடகத்தில் நடிப்பதற்கும் நாட்டிய சாஸ்திரம் மிகவும் உருதுணையாக இருக்கும் என நம்புகின்றேன்.

பொதுவாக “பாவம்” என்றாலே நவரசங்களை நினைவூட்டும். நவ என்றால் ஒன்பது. ஆக, நவரசங்கள் ஒன்பது ரசங்களைக் குறிக்கிறது. ஆனால் “பாவம்” எனச்சொல்லப்படும் மனதில் எழும் உணர்ச்சியை 41 தன்மைகளாகப் பரதமுனி பிரித்துள்ளார்! வெறும் நவரசத்தைப் பற்றி தெரிந்தவர்களின் மத்தியில் இது பெரிய ஆச்சிரியத்தை உண்டாக்கலாம். மனிதர்கள் மனதில் எழும் உணர்ச்சிகள் 41 ஆகும் (அதற்கு மேலும் இருக்கலாம்) அவை அன்பு, அதிசயம், வெறுப்பு, போதை, சோம்பேறித்தனம், போன்ற 41 உணர்ச்சிகள் உள்ளன. பரதமுனிவரின்படி, 41 பாவங்களில் முதல் 8 உணர்ச்சிகளை ஸ்தாயி பாவம் என்ற பெயர் சூட்டியுள்ளார். ஸ்தாயி என்றால் நிலைத்தன்மையுடையது என்பதாகும். சிரிப்பு, துன்பம், கோபம், உற்சாகம், காதல், பயம், வெறுப்பு, அதிசயம் என ஸ்தாயி பாவங்கள் நீண்ட நேரத்திற்கு நிலைத்திற்கும் உணர்ச்சிகளாகும். இந்த முதல் 8 உணர்ச்சிகளைப் பற்றி உலகப் புகழ் பெற்ற psychologist and personality theorist, Silvan Solomon Tomkins (1911 – 1991) என்பவராலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பல நூற்றாண்டிற்கு முன்பே பரதமுனிவர் நாட்டிய சஸ்திரத்தில் எழுதியுள்ளார் என்பது பெருமைக்கூறியது. உலகப் புகழ் பெற்ற Silvan Solomon Tomkins ஸ்தாயிபாவத்தைப் பற்றி கூறிய விபரங்களை இந்த இணையதளத்தில் காணலாம். http://www.aquiziam.com/facial_expression_basics.html

ஒரு பாவம் நீண்ட நேரம் நீடித்திருந்தால் ரசம் பிறக்கும். உதாரணத்திற்கு ஒருவன் உற்சாகமாக ஒரு செயலில் ஈடுப்பட்டால் அவன் ஈடுபடுகின்ற அச்செயலில் வீரம் வரும். உற்சாகம் எனும் ஸ்தாயி பாவம் நீடித்தால் வீரம் எனும் ரசம் பிறக்கிறது. அதேபோல், ஒருவன் குரோதம் கொண்டால் நாளடைவில் அந்த குரோத உணர்வு ரெளத்ரமாக மாறும். ஆக, பரதமுனி நீண்ட நேரம் இருக்கும் பாவம் அல்லது மன உணர்வு ஒரு ரசமாக மாறுகிறது என்பதனை நாட்டிய சாஸ்திரத்தில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

கீழ்காண்பவை ஸ்தாயி பாவங்கள் நீடித்தால் ஏற்படும் ரசத்தைக் காட்டுகிறது.

1. ஆண் பெண் உறவு நீடித்தால் சிருங்காரம் (அன்பு) எனும் ரசம் பிறக்கும்.
2. ஒருவனிட்த்தில் சோகம் நீடித்தால் கருணை எனும் ரசம் பிரக்கும்.
3. குரோதம் நீடித்தால் ரெளத்ரம் எனும் ரசம் பிறக்கும்.
4. உற்சாகம் நீடித்தால் வீர ரசம் பிறக்கும்.
5. பயம் நீடித்தால் பயானகம் ரசம் பிறக்கும்.
6. ஆச்சரியம் நீடித்தால் அற்புதம் ரசம் பிறக்கும்.
7. கல கலப்பான சிரிப்பு நீடித்தால் ஹாஸ்யம் பிறக்கும்.
8. வெறுப்பு நீடித்தால் கோபம் ரசம் பிறக்கும்.

பரத கூறியது போல 41 பாவங்களில் மற்ற 33 பாவங்களை வியபிசாரி பாவங்கள் என்று பெயர் சூட்டியுள்ளார். வியபிசாரி பாவங்கள் நிலையானத் தன்மையுடையவை அல்ல. வியபிசாரி என்றால் ஒன்றை இழுத்துச் செல்வது ஆகும். ஆக, வியபிசாரி பாவங்கள் ரசம் உண்டாவதற்கு உதவுகின்றன. வியபிசாரி பாவம் உணர்ச்சிக்கு அழுத்தம் கொடுத்துவிட்டு மறைந்து விடுகின்றன. இந்த பாவங்கள் பின்வருவாறு:-

1. மனச்சோர்வு, ஏக்கம்
2. பலவீனம், சக்தி இன்மை
3. சந்தேகம்
4. பொறுமை
5. குடிமயக்கம், வெறி
6. அழுப்பு
7. சோம்பல்
8. சோர்வு
9. கவலை
10. கவனக் குறைவு
11. நினைவு
12. மனநிறைவு
13. அவமானம்
14. நிலையற்ற
15. மகிழ்ச்சி
16. கொந்தளிப்பு
17. வெறி
18. அகந்தை
19. துன்பன்
20. பொறுமையின்மை
21. உறக்கம்
22. நரம்புத் தளர்ச்சி
23. கனவு
24. அஜீரணம்
25. அதிக கோபம்
26. பாசாங்கு
27. கொடூரம்
28. உறுதி
29. நோய்
30. பைத்தியம்
31. சாவு
32. பயம்
33. பதட்டம்

மனதில் உணர்ச்சிகள் எழும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், அவை சில நிலைத்தன்மையுடையவை நிலைத்தன்மையற்றவை என்பதை பரதமுனிவரின் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ஆக, நாட்டியத்தில் மட்டுமில்லாது, ஒரு மனிதன் தன் வாழ்வில் பலவகையான உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அனுபவிக்கிறான். ஸ்தாயி பாவம் எனப்படும் நிலைத்தன்மையுடைய மனஉணர்ச்சிகளையும் வியபிசாரி எனப்படும் நிலைதன்மையற்ற மன உணர்வையும் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கின்றான்.

அவ்வகையில் பாவத்தை மட்டுமே மையப்படுத்தி ஆடப்படும் நாட்டியத்தை கதகளி என்பார்கள். கேரள, இந்தியா மாநிலத்தில் தொன்றுதொட்டு வழங்கிவரும் நாட்டிய நாடகக் கலையே கதகளி எனப்படும். கதையைக் கூறுவதே கதகளி. இந்தக் கலை பழங்காலத்திலிருந்து தொடர்ந்து மிகவும் நாகரீகமாக வளர்ந்து வருகிறது. திறந்த வெளியில் நடைபெறும் இந்த நாட்டியத்தில் பெரிய தீபங்கள் எண்ணெய்விட்டு ஏற்றப்படும். இரவு உணவிற்குப் பின்பு ஆரம்பித்து விடிய விடிய தொடரும். இதனை நேரில் காண்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். கதகளி இராமாயண மஹாபாரத கதைகளிலிருந்து சில காட்சிகள் அல்லது புராணங்களிலிருந்து கதைகளை நாட்டியமாக ஆடுவர். பிரசித்தி பெற்ற குடியாட்டம், கிருஷ்ண ஆட்டம் என்ற நாடகங்களில் கதகளியின் சாயலைக் காணலாம். ஆண்கள் மாத்திரமே ஆடிவந்த இக்கலையில் தேக அம்சம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுதிறது. பலவித மூலிகை எண்ணெய்களைத் தேய்த்து உடலை வலுப்படுத்தி வருவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஒப்பனை மற்றும் ஆடை அணிகலன்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அரிசி மாவினால் தயாரிக்கப்பட்ட ஒப்பனையுடன் பலவித வண்ணப் பொடிகளைக் கலந்து மணிக்கணக்காக முகத்தில் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வடிவம் அமைப்பர். அபிநயத்திற்கு கண், புருவம், உதடு போன்றவை அதீதமாகப் பயன்படுத்தப்படும். சிறுவயதிலிருந்தே முகத்திலுள்ள கண், புருவம், உதடு போன்ற உபாங்கங்களை முறையாகப் பயன்படுத்த பயிற்சி செய்வர். அப்பயிற்சி மிகவும் கடினமானது. கேரள சென்றிருந்த பொது அக்கடினத்தை நேரில் கண்டேன். கேரள பயணத்தின் போது சில கதகளி ஆடவருகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

நாட்டியத்தில் கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் வேலை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நர்த்தகிக்கு அசைவு உடலில் மட்டும் முக்கியமன்று மனதிலும்தான்.


இதழ் 37 

ஜனவரி 2012 

வல்லினம் கலை இலக்கிய இதழ்

https://www.vallinam.com.my/issue37/essay1.html



No comments:

Post a Comment